சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்களின் வீடுகள் மீது சரமாரி தாக்குதல்.. 50 வீடுகள் சேதம்!
மதுரை: சிவகங்கை மாவட்டம் அரசனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை ஒரு கும்பல் வெறித்தனமாக தாக்கி சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், அரசனூர் பகுதியில் ஒரு தரப்பினர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபட முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முதல் தரப்பினர் போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலையை வைத்து திருவிழாவை நடத்தினர். நேற்று முன்தினம் விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது.
இந்த நிலையில் விநாயகர் சிலையை வைத்த அரசனூரைச் சேர்ந்த கோமாளி என்பவரது மகன் பாலமுருகன் (25) என்பவருக்கு நேற்று காலையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக வெளியூரில் இருந்து அவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் அனுமதியுடன் சிலை வைத்த பகுதிக்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் கண்ணில் எதிர்பட்டவர்களையும், எதிர்பட்டதையும் அடித்து நொறுக்கினர்.
இந்தத் திடீர் தாக்குதலில் கோமாளியின் வீடு உள்பட 50க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. வீட்டில் உள்ள பொருட்களையும் வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் கார், 10க்கும் மேற்பட்ட டூவீலர்களை சேதப்படுத்திய அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து பூவந்தி போலீசில் கோமாளி புகார் கொடுத்தார். தகவலறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, எஸ்பி ஜெயச்சந்திரன், ஆர்டிஓ அரவிந்தன் உள்ளிட்டோர் விரைந்தனர். ஜாதித் கலவரம் வெடித்து விடாத வகையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.