மயக்க மருந்து கொடுத்து டிவி ஊழியரிடம் நகை, பணம் பறிப்பு.. மலிவு விலை செல்போன் ஆசையால் வந்த வினை!
சென்னை: குறைந்த விலைக்கு வெளிநாட்டு செல்போன் தருவதாக ஏமாற்றி மதிய நேரத்தில் சென்னையின் முக்கியச் சாலையில் தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் மர்ம கும்பல் நகை மற்றும் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஊழியரான ரமேஷ் (37), நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை பேருந்து நிறுத்தத்தில் அண்ணா சாலை செல்லும் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்த மர்ம நபர் ஒருவர், தன்னிடம் சில வெளிநாட்டு செல்போன்கள் இருப்பதாகவும், ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை ரூ. 8 ஆயிரத்திற்கு விற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே புதிய செல்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரமேஷ், இந்தப் பேச்சில் மயங்கி விட்டார். ரமேஷை அங்கேயே காத்திருக்கும் படி கூறிய அந்நபர், தன்னுடைய கூட்டாளிகள் இருவரையும் அங்கு வரவழைத்துள்ளார்.
சில்க் சேலை உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய பையுடன் வந்த அவர்கள், செல்போன் இருப்பதாகக் கூறி பெட்டி ஒன்றைத் திறந்துள்ளனர். அதிலிருந்து வெளியான மயக்க மருந்து நெடியால் மயக்கமடைந்துள்ளார் ரமேஷ்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த ரமேஷ், தன் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியும், பாக்கெட்டிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார் ரமேஷ். இது தொடர்பாக அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் பரபரப்பான சாலை அருகே பட்டப் பகலில் மதிய வேளையில் மயக்க மருந்து மூலம் தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் நகை மற்றும் பணம் திருடப்பட்ட துணிகர சம்பவம் சென்னை மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இனிமேல் செல்போன் வாங்கனும்னா கடைக்குப் போய் வாங்குங்க. கண்டவங்க கிட்டயும் வாங்க முயற்சிக்காதீங்கப்பா!