தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம் எது தெரியுமா?
சென்னை : தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. நல்ல எண்ணெயில் லட்சுமி தேவியும், வெந்நீரில் கங்கா தேவியும் வாஸம் செய்வதாக ஐதீகம்.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வித, விதமான புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை 29ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது நரகாசுரனுக்கு கிருஷ்ணபகவான் அளித்த வரமாகும். இன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றனர்.
நல்ல நேரம்
தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம். தரிதிரத்தை நீக்கும் குளியல் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
கங்காஸ்நானம்
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீபாவளிக்கு விதி விலக்கு
அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
கங்கா தேவி பூஜை
தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம். இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம்.
தோஷங்கள் விலகும்
நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி. தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.