தினகரன் செய்வது ஒன்றும் சரியில்லை... மனம் வேதனையாக இருக்கிறது... கங்கை அமரன்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: உடல்நல குறைவு காரணமாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததும் அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் கங்கை அமரன் களம் இறங்கினார்.
தேர்தல் ரத்து
அப்போது தமிழிசை சௌந்தரராஜனுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் பணப்பட்டுவாடா காரணமாக அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், தினகரன் அணி சார்பில் தினகரன், திமுக சா்ர்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் என கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களே இந்த முறையும் போட்டியிடுகின்றனர்.
கங்கை அமரனுடன் சந்திப்பு
ஆனால் பாஜக சார்பில் கரு நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். கங்கை அமரன் ஓரங்கட்டப்பட்டார், பயந்து கொண்டு ஓடி விட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய கங்கை அமரனை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், வேட்பாளர் கரு நாகராஜனும் சந்தித்தனர்.
போட்டியிட முடியவில்லை
அப்போது பேசிய தமிழிசை, பாஜகவில் முக்கிய நிர்வாகியாக கங்கை அமரன் உள்ளார். உடல்நல குறைவு காரணமாக இந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. அதனால் அவரிடம் ஆசி வாங்க இங்கு வந்தோம் என்றார்.
உடல் ஒத்துழைத்தால்...
இதைத் தொடர்ந்து பேசிய கங்கை அமரன், நான் எதற்கும் பயந்து கொண்டு ஓடி ஒளியவில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே எனக்கு உடல் நிலை பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மற்றபடி உடல் ஒத்துழைத்திருந்தால் நிச்சயம் போட்டியிட்டிருப்பேன்.
வாக்களியுங்கள்
இனி பாஜகவில் தான் இருப்பேன். அதன் கொள்கைகளை நாட்டுக்கு எடுத்துரைப்பேன்.காசு இருந்தால்தான் எம்எல்ஏ ஆகமுடியும் என்றால் தமிழகம் எங்கு செல்கிறது என்பதை யோசியுங்கள். தினகரன் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். சம்பாதிக்க அரசியலுக்கு வராதவர்களுக்கு வாக்களியுங்கள்.
ஏமாற்றாதே...
காசை வாங்கிக் கொண்டு மூன்று பேருக்கும் ஓட்டு போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் தாமரைக்கு போடுங்கள் என்று கூறிய கங்கை அமரன் ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே... ஏமாறாதே, ஒன்றுமே புரியல உலகத்துள்ளே ஆகிய பாடல்களை பாடி காட்டினார்.