ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்!
சென்னை: ஆர்.கே.நகர் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவாக நடிகர்களை களமிறக்க அவரது மகன்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
பாஜக சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்து வருகிறார்.
கங்கை அமரன் திரைத்துறையை சேர்ந்தவர், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதால் தொகுதி மக்களால் எளிதாக அடையாளம் காண முடிகிறது.
சினிமா கவர்ச்சி
தொகுதியில் ஏழை, எளிய, படிப்பறிவு குறைந்த மக்கள் அதிகம். கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் உள்ளனர். இவர்களை கவர திரை பிரபலங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள், கங்கை அமரனின் மகன்களான, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.
கைவிட்ட முன்னணி ஸ்டார்கள்
இருவரும் தந்தையின் வெற்றிக்காக பிரசாரம் செய்ய நடிகர் நடிகைகள் பட்டாளத்தை தேர்தல் களத்தில் இறக்க, முன்னணி நடிகர்,நடிகைகளிடம் பேடியிருக்கிறார்கள். ஆனால், எதற்கு சிக்கல் என கருதி, யாரும் சம்மதிக்கவில்லை.
இரண்டாம் கட்ட நடிகர்கள்
முக்கிய நடிகர், நடிகைகள் கைவிட்டதால், தனது இயக்கத்தில் நடித்துள்ள இரண்டாம் நிலை நடிகர், நடிகைளிடம் பேசியுள்ளனர். மேலும், ஃபெப்சி அமைப்பிலுள்ளவர்களையும் அழைத்து வர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களையும் அழைத்து வந்து ஆர்.கே.நகரை களைகட்டச் செய்ய திட்டமிட்டுள்ளனர் வெங்கட்பிரபுவும், பிரேம்ஜியும் என்கிறார்கள் திரை வட்டாரத்தில்.
கழற்றிவிட்ட ரஜினி
ரஜினிகாந்த்தை எப்படியாவது தனக்கு ஆதரவாக பேசச் செய்து மக்களிடம் ஈர்ப்பை உருவாக்க கங்கை அமரன் முயன்றார். ஆனால் ரஜினிகாந்த்தோ யாருக்குமே ஆதரவு இல்லை என பகிரங்கமாக டிவிட்டரில் அறிவித்தார். இதனால் வேறு திரையுலக பிரபலங்களை களமிறக்கியே தீருவது என்ற முடிவில் உள்ளனர் கங்கை அமரன் குடும்பத்தில்.
என்ன கொடுமை சார் இது!