இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று.. தனி சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது.. கங்கை அமரன்
இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதனை தனிச் சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியன் மற்றும் சித்ரா, தன்னுடைய அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று கூறியிருந்தார். மீறிப் பாடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியதாவது: நான் ஒரு இசை ரசிகன். என்னைப் பொருத்தவரை இளையராஜாவின் இசையை ஒரு வியாபாரமாக நாம் பார்க்கவில்லை.
நமக்கு சொந்தமாகக் கிடைக்கக் கூடிய மூச்சுக் காற்று போல நினைக்கிறோம். இளையராஜா பாடலை கேட்கும் போது மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதுதான் உண்மை.
எஸ்.பி.பி. குழுவில்…
இளையராஜா திடீரென பாடல்களை எஸ்.பி.பி. பாடக் கூடாது என்று சொன்னது கஷ்டமான ஒன்று. ஏனென்றால் எஸ்.பி. பாலசுப்ரமணியன் வைத்திருந்த கச்சேரிக் குழுதான், நான், அண்ணன் இளையராஜா, அண்ணன் பாஸ்கர் எல்லாம் சேர்ந்து வாத்தியக்காரர்களாக பணியாற்றினோம்.
தனிப்பட்ட முறையில்…
எஸ்.பி.பி நெருக்கமான நண்பர். உரிமம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதால் பாட்டை மேடையில் பாடாதே என்று தனிப்பட்ட முறையில் இளையராஜா சொல்லி இருக்கலாம். எதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டாம்.
தவிர்த்து..
ஏன் இதனை இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இதனை தவிர்த்து இருக்கலாம். ஜேசுதாசோ, மனோவா, சித்ராவோ, பாலசுப்ரமணியமோ, மற்றவர்களோ என்னுடைய பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று அவர் சொல்வதை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது.
கெட்ட பெயர்
அவருடைய பாடல்களை எப்படி பாடாமல் இருக்க முடியும். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை பாட யார் அழைத்தாலும் இளையராஜாவின் பாடலை பாடச் சொல்லி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அப்போது அவர் பாடத்தான் செய்வார். அதனால் இளையராஜா செய்தது தவறு. எனக்கு அதில் விருப்பம் இல்லை. அவருடைய பாடல்களை தனிச் சொத்தாக்கி மற்றவர்களை பாடக் கூடாது என்று சொல்வதே அவருக்கு ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கங்கை அமரன் கூறினார்.