'தப்பித்தது தமிழ்நாடு'.. சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டது நீதித்துறை.. கங்கை அமரன் வரவேற்ப
தப்பித்தது தமிழ்நாடு என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை நீதித்துறை செய்துவிட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இசையமைப்பாளர் கங்கை அமரன் வரவேற்றுள்ளார்.
21 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இசையமைப்பாளர் கங்கை அமரன் வரவேற்றுள்ளார். இவருடைய பையனூர் பங்களாவை ஜெயலலிதா மற்றும் சசிகலா பலவந்தமாக பிடிங்கி பறித்துள்ள நிலையில், தப்பித்தது தமிழ்நாடு என்று கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தப்பித்தது தமிழ்நாடு
மேலும், கொஞ்சநாள் தான் பொறுப்போம் பின்னர் செய்ய வேண்டியதை செய்வோம் என்று சசிகலா கூறியதற்கு நீதித்துறையே சசிகலா விஷயத்தில் செய்ய வேண்டியதை செய்துவிட்டது என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
ஏற்கனவே, சசிகலாவை எவரும் எதிர்க்க முன்வராத போது பன்னீர்செல்வத்தின் முடிவு துணிச்சலானது என்றும் பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருக்கிறார் என்றும் கங்கை அமரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
பையனூர் பங்களா
கங்கை அமரனுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மிரட்டி ஜெயலலிதா வாங்கினார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதே போன்று பல பணக்காரர்களின் சொத்துக்களையும் மிரட்டி வாங்கிய ஜெயலலிதா மற்றும் சசிகலா கும்பலை தொடர்ந்து அவர் எதிர்த்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்காமலேயே கட்சி பொறுப்பையும், ஆட்சியையும் கைப்பற்ற முயலுவது எந்த விதத்தில் நியாயம் என்று சசிகலா நோக்கி கங்கை அமரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
வரவேற்பு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கங்கை அமரன் வரவேற்றுள்ளார். மேலும், நீதித்துறை சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை செய்துள்ளது என்று கூறியுள்ளார்.