சென்னையில் கஞ்சா விற்பனையில் பயங்கர மோதல்- 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை!
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை செய்வதில் இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதில், 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் ரஞ்சித்குமார், சக்திவேல், மில்லர், செங்கோட்டையன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்குபேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது துரைப்பாக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் அவர்களை மடக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கலியா (எ) ரஞ்சித்குமார் மற்றும் மில்லர் ஆகிய இரண்டு பேரும் பலியானார்கள்.
படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் துரைப்பாக்கதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சென்னையில் துரைப்பாக்கத்தை அடுத்து உள்ள கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே கோஷ்டி பூசல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த 4 பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.