நாமக்கல்லில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் நேற்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 2 உடல் கருகி உயிரிழந்தனர்.
நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான டீ கடையில் இரவு பணி முடிந்து கடை உரிமையாளர் முருகேசன் மற்றும் டீ மாஸ்டர் செந்தில்குமார் ஆகியோர் கதவை உள்புறமாக பூட்டி விட்டு உள்ளே தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் நகர தீயணைப்பு படையினர், பக்கத்தில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். பின்னர் இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.