சமையல் கேஸ் தட்டுப்பாடு 2 வாரங்களில் தீரும் – இன்டேன் நிறுவனம் உறுதி!
சென்னை: சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடானது இன்னும் 2 வாரங்களில் சரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் கேஸ் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 12 லட்சம் பேரும், சென்னை நகரில் மட்டும் 12 லட்சம் வாடிக்கையாளர்களும் இதற்கு உள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு:
கடந்த சில மாதங்களாகவே சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
30 நாட்கள் தாமதம்
பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் சிலிண்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால் 20 நாட்கள், 30 நாட்கள் வரை சிலிண்டரை பெற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திரும்பப் பெற்றதால் பிரச்சனை:
பழைய மற்றும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாத சிலிண்டர்கள் சரண்டர் செய்யப்பட்டதே இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.
புதிய சிலிண்டர்கள் தாமதம்:
உபயோகத்திற்கு தகுதியில்லாத சிலிண்டர்கள் திரும்ப பெறப்பட்டததால் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் வருவதில் ஏற்பட்ட காலதாமதமே கேஸ் வினியோகிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது.
தொடரும் தட்டுப்பாடு:
இந்த நிலையில் தற்போது 2 லட்சம் புதிய சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனாலும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.
படிப்படியாக குறையும்:
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர், "சமையல் கேஸ் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் சிலிண்டர் வினியோகம் செய்ய வேண்டும்.
2 லட்சம் புதிய சிலிண்டர்கள்:
புதிதாக 2 லட்சம் சிலிண்டர்கள் வந்துள்ளன. இதனால் இனி தட்டுப்பாடு ஏற்படாது. ஒரு சிலர் சிலிண்டர்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர். இதனால் சிலிண்டர் வினியோகம் செய்வதில் காலதாமதமாகிறது.
முறைகேடு பற்றி புகார்:
இன்னும் 2 வாரத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு முழுமையாக சீராகும். கேஸ் ஏஜென்சீஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் முறைகேடாக வினியோகம் செய்தால் எங்களுக்கு புகார் கூறலாம். எழுத்துபூர்வமாக கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.