வந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே.. இனி "வெளுத்துக் கட்டுங்கள்"
எரிவாயு சிலிண்டர் சலவை பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: ஒருவழியாக கரியை உபயோகப்படுத்தும் இஸ்திரி பெட்டியிலிருந்து பல சலவை தொழிலாளிகளுக்கு தற்போது விடிவு காலம் பிறந்திருக்கிறது.
கரியை அள்ளி இஸ்திரி பெட்டிக்குள் திணித்து, அதனை பற்றவைத்து கங்கு வரும்வரை சூடேற்றி, அதை அணையாமலும், அனல் குறையாமலும் பார்த்துக் கொண்டே தங்கள் வாழ்நாளை கழித்து மறைந்தே போன சலவை தொழிலாளிகள் லட்சத்திற்கும் மேல். இப்போதும் இந்த கரியை கொண்டுதான் பலர் சலவை துணிகளை தேய்த்து வருகிறார்கள்.
ஆனால் இவ்வாறு செய்வதால், இந்த பெட்டியிலிருந்து கார்பன்டைஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. இது நமக்கு உடல்நலனுக்கு ஏராளமான கேட்டினையும் உருவாக்கி வருகிறது. இதற்கான கரியும் பெருமளவு கிடைப்பதில்லை. இதிலிருந்து விடுபட, எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கும் சலவைப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலவைப்பெட்டியை தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளது. அதற்கான விழாவும் இன்று கோவையில் நடைபெற்றது.
எரிவாயு சிலிண்டர் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கக்கூடும் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில் இந்த சலவை பெட்டியை பயன்படுத்த முடியுமாம். விலையும் மற்ற சலவை பெட்டி போலத்தான். சிலிண்டர் சலவை பெட்டி விலை 6500 ரூபாய் என்று சொல்கிறார்கள். இதனை எந்தவிதமான எரிவாயு சிலிண்டர் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதுமட்டுமில்லை, வழக்கமாக வரும் கரண்ட் பில்லை விட இரண்டு மடங்கு குறைந்த அளவுதான் செலவாகிறதாக கூறுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா மட்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சிலிண்டர் சலவைப் பெட்டி ஒரு வரப்பிரசாதம்தான். சலவைத் தொழிலாளர்களே.. இனி "வெளுத்துக்கட்டுங்கள்"!