கேஸ் டேங்கர்களும் இன்று முதல் ஸ்டிரைக்.. ஸ்தம்பிக்கப் போகும் சமையலறைகள்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாட்களாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கேஸ் டேங்கர் லாரிகளும் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளன.
சென்னை: லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி உயர்வு, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற உத்தரவு போன்றவற்றை கண்டித்து, கடந்த 30ம் தேதி முதல் தென்மாநில லாரி உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கேஸ் டேங்கர் லாரி
இந்நிலையில், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் லாரி வேலை நிறுத்தத்தில் இன்று முதல் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலையில் இருந்து கேஸ் டேங்கர்கள் இயக்கப்பட வில்லை.
பாதிப்பு
இதனால் அன்றாடப் பயன்பாட்டில் மிக முக்கியமான கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வீடுகள், ஹோட்டல் உள்ளிட்டவை கேஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
பேச்சுவார்த்தை
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றம் கண்டு வருவதால் லாரி நிறுத்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
சுமூகத் தீர்வு
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும். இதில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டால்தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதே போன்று கேஸ் சிலிண்டர்களின் தட்டுபாட்டால் ஏற்படும் அவதியில் இருந்தும் தப்பிக்க முடியும்.