லைப் அகைய்ன்... கமலைப் பிரிந்த கவுதமி இனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?#Gautami
புற்றுநோயிலிருந்து போராடி மீண்டு வந்த நடிகை கௌதமி தற்போது ‘லைப் அகைய்ன்’ என்ற புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னை: நடிகர் கமலை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ள நடிகை கௌதமி, தனது 'லைப் அகைய்ன்' புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் மூலம் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார். இது தவிர நடிகர் கமல் படங்கள் சிலவற்றிற்கு அவர் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தவிர புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடிகை கௌதமியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தான். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது தன்னம்பிக்கையால் நோயுடன் போராடி மீண்டார். ''கண்களுக்கு வந்த கண்ணீர் கன்னங்களில் உருளாமல் பார்த்துக்கொண்டேன்'' என தனது போராட்டத்தை வலிகளைத் தாண்டிய உறுதியுடன் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போதும், 'லைப் அகைய்ன்' என்ற புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையும் அவர் சந்தித்தார். விரைவில் தமிழக முதல்வரையும் இது தொடர்பாக சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான், கமலைப் பிரிவதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.