இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு திடீரென கமல் மீது கவுதமி பாய்வது ஏன்?
கமல் மீது திடீரென புகார் கூறியுள்ள கவுதமி இத்தனை நாட்களாக மவுனமாக இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தசாவதாரம், விஸ்ரூபம் ஆகியவற்றில் ஆடை வடிவமைத்தமைக்கு தனக்கு இன்னும் ஊதியம் தரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் திடீரென இந்தப் புகாரை அவர் கூறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமலும் கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கமலிடம் இருந்து பிரிந்து வந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து கவுதமி சமூகவலைதளத்தில் எழுதிய கடிதத்தில் கூறுகையில், நான் தனிப்பட்ட முறையிலும், தொழில் நிமித்தமாகவும் கமல்ஹாசனுடன் உறவை தொடரப் போவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இது தவறான செய்தியாகும். கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் கமலை விட்டு பிரிவதாக அறிவித்தவுடன் அவரை நான் தொடர்பு வைத்திருக்கவில்லை.
|
13 ஆண்டுகளாக...
அவரை விட்டு பிரிந்து வந்தது முதல், எனக்கும் எனது மகளுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை மறு கட்டமைப்பு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த காலகட்டத்தில் எனது மகளுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வதிலேயே நான் கவனம் செலுத்தி வந்தேன். கடந்த 13 ஆண்டுகளாக கமலுடன் நான் இணைந்திருந்த நேரத்தில் ஆடை வடிவமைப்பாளராக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்காகவும், கமல் நடித்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்காகவும் பணியாற்றினேன்.
நிதி ஆதாரம்
ஆடை வடிவமைப்பாளராக இருந்து பணி செய்ததே எனது முக்கிய வருமானமாகும். ஆனால் கேமராவுக்கு முன்னும், கேமராவுக்கு பின்னும் நான் செய்த பணிகளுக்கு கமல் எனக்கு ஊதியத்தை வழங்கியதில்லை. நான் கடந்த 2016 -இல் கமலுடன் இருந்து பிரிந்தபோது தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கும் எனக்கு ஊதிய பாக்கி இருந்தது. எனது வாழ்க்கைக்கு இதுதான் நிதி ஆதாரம் என்பதால் எனது சம்பள பாக்கியை வழங்க கோரி கமலிடமும் அவரது ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனத்திடமும் கோரிக்கை விடுத்தேன். எனினும் ஒரு கணிசமான தொகையை அவர் இன்னமும் வழங்கமல் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கடந்த 2016 அக்டோபர் மாதத்துக்கு முன்னர் எங்கள் இருவருக்குள்ளும் இருந்த அர்ப்பணிப்பு, ஈடுபாடு மாறுபட்டது. இதனால் அவரை விட்டு பிரிந்து சென்று எனக்கென்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினேன். பரஸ்பர மரியாதை, அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவை எந்த உறவு முறைகளுக்கும் முக்கியமானது, குறிப்பாக அவை சேர்ந்து வாழ்வதற்கு இன்றியமையாதது. இவை இல்லாததால் நாள்தோறும் வாழ்க்கை என்பது மனவேதனையை தந்தது.
குறிப்பாக ஸ்ருதி ஹாசன் காரணம் இல்லை
நாங்கள் இருவரும் பிரிந்ததற்கு யாரும் காரணம் இல்லை, குறிப்பாக ஸ்ருதிஹாசன் காரணம் இல்லை. எனக்கும் ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு, இதுதான் நாங்கள் பிரிவதற்கு வழி கோலியது என்று வந்த செய்திகளில் உண்மை இல்லை. மூன்றாம் நபரோ அல்லது எங்கள் குழந்தைகளோ எங்கள் பிரிவிற்கு காரணம் இல்லை. ஸ்ருதி மற்றும் அக்ஷராவை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும், அவர்களை இன்றும் நான் அப்படிதான் பார்க்கிறேன். என்னுடைய சுயமரியாதையை இழப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாததாலும் கமலின் அர்ப்பணிப்பு உணர்வில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும் மட்டுமே இந்த பிரிவு.
சோதனை காலங்களில்...
கமல்ஹாசன் கால் முறிவு ஏற்பட்டபோது அவருடன் இருந்து நான் பார்த்துக் கொண்டேன். அவர் தனது சொந்த காலில் எழுந்து நடக்கும் வரை அவருடன் இருந்தேன். அவருடைய சோதனை காலங்களில் அவரது பின்னால் நின்றேன். கல்வியில் பெண் குழந்தையை ஆதரவாக இருப்பது மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை விரும்புவது ஆகியவற்றில் எனது தாயை பார்த்தே நான் வளர்ந்தேன். அதுபோல் தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய எனது தந்தையின் அர்ப்பணிப்பை பார்த்து வளர்ந்தேன். கடந்த சில ஆண்டுகளாக அவர்களது உத்வேகம்தான் என்னை வழிகாட்டி வந்தது.
அன்புதான் முக்கியம்
ஒற்றை பெண்மணியாக இருந்து எனது மகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க போராடி வருகிறேன். லைப் அகைன் பவுண்டேஷனில் நான் எனது பணியை ஆற்றி வருகிறேன். எண்ணற்ற மக்களின் அன்பு கிடைப்பதற்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். நான் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நாளின் மதிப்பை உணர்கிறேன். நான் உயிரிழந்தவுடன் மக்களாகிய உங்களுடைய அன்பை தவிர நான் வேறு ஒன்றையும் கொண்டு செல்ல போவதில்லை. அனைவருக்கும் எனது நன்றி என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
திடீர் பாய்ச்சல் ஏன்
கவுதமி கூறுவது உண்மையாகவே இருந்தாலும் கூட இத்தனை நாட்களாக இருந்து விட்டு, அவர் கட்சி தொடங்கியுள்ள நேரத்தில் இந்த சலசலப்பை ஏற்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.