கமலிடம் நான் எதிர்பார்ப்பது செய்த வேலைக்கு ஊதியம் மட்டுமே.. கவுதமி விளக்கம்
Recommended Video
சென்னை: நான் ஆதாரம் இல்லாமல் யார் மீது குற்றம்சுமர்த்த மாட்டேன் என்பது என்னை 30 ஆண்டுகளாக தெரிந்தவர்களுக்கு நன்குத் தெரியும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக கமலுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்து பிரிந்து வந்தார். இந்நிலையில் அத்தனை மாதங்கள் கழித்து தற்போது அவர் மீது ஒரு புகாரை அளித்துள்ளார் கவுதமி.
ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கமல் நடித்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் தாம் பணியாற்றியமைக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை என்றும் அந்த ஊதியம் தன் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
கவுதமி விளக்கம்
இதற்கு கவுதமி மீது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து நடிகை கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ள கடிதத்தில் கூறுகையில், நான் முன்பு இணைத்த கடிதத்தில் கூறியிருந்தது போல் கமல்ஹாசனுடன் இணையபோவதில்லை. எதற்காக நான் அவருடன் மீண்டும் இணைய வேண்டும். நான் கமல் குறித்து முன்பு போஸ்ட் செய்திருந்த கடிதத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டு சொத்துக்காக இது போல் செய்வதாக என்னை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதனாலேயே இந்த முறை இந்த கடிதத்தின் மூலம் விளக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
தவறான கருத்துகள்
நான் யாரிடத்திலிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. கமலிடம் நான் கேட்பது ஒன்றுதான், ஆடை வடிவமைப்பாளராக நான் பணியாற்றியதற்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை தாருங்கள் என்பதுதான். என்னுடைய தற்போதைய நிலையை அறியாத சிலர் என்னை பற்றி தவறாக கருத்துகளை பதிவு செய்து வருவதை கண்டு நான் வேதனை அடைகிறேன். கமல்ஹாசனை நான் பிரிந்து வந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாற்ற முடியாது. ஒற்றை பெண்ணாக இருந்து கொண்டு என் வாழ்க்கையை நடத்தவும் என் மகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கவும் மீண்டும் போராடி வருகிறேன்.
அணுகுமுறை
ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நல்லவராகவும், நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை காட்டிலும் இந்த வாழ்க்கையில் முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை. நான் அதை நோக்கியே பயணிக்கிறேன். இந்த உலகத்தில் நல்ல மற்றும் கருணை குணம் கொண்ட மனிதர்கள் ஏராளம் உள்ளனர். அவர்களை போன்றோரை தேடி வருகிறேன். கெட்டதும் துக்க கரமான விஷயங்கள் எல்லார் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். ஆனால் நல்ல விஷயங்களை நாடுவதும், சவால்களை நேர்மறையான அணுகுமுறையால் எதிர்கொள்வதையும் நாம் செய்வோம். அதைத் தான் நானும் செய்துள்ளேன்.
|
ஆதாரம் இருக்கு
மக்களுக்கான உதவும் போது எனக்கு கிடைக்கும் சந்தோஷத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இதுதான் என் வாழ்க்கை. என்னுடைய முடிவு சரியா தவறா என்ற யார் கருத்தையும் நான் கேட்கவில்லை. ஆனால் சமூகத்தில் உள்ள மக்களுக்கு என்னுடன் சேர்ந்து பணியாற்ற என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும். என்னை பற்றி 30 ஆண்டுகள் நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும், நான் யாரை பற்றியும் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை. நான் ஒருவர் மீது புகார் கூறுகிறேன் என்றால் அதற்கு காரணமும் ஆதாரமும் இல்லாமல் இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார் கவுதமி.