தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டேனா?.. தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு முதல்வரே.. சீறிய கீதாஜீவன்
தூத்துக்குடியில் வன்முறையை நான் தூண்டிவிடவில்லை என்று முதல்வரின் குற்றச்சாட்டுக்கு அந்த தொகுதி எம்எல்ஏ கீதாஜீவன் மறுப்பு தெரிவித்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த வன்முறையை நான் தூண்டிவிட்டதாக முதல்வர் கூறுவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு என்று கீதாஜீவன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி மக்கள் பேரணி நடத்திய போது திமுக சார்பில் கீதாஜீவனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அங்கு வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சட்டசபை கூடியது. முதல்வர் எடப்பாடி பேசுகையில் தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டது திமுக எம்எல்ஏ கீதாஜீவன் என்று குற்றம்சாட்டினார். இதற்கு கீதாஜீவன் மறுப்பு தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்
இதுகுறித்து கீதாஜீவன் கூறுகையில் தூத்துக்குடியில் வன்முறையை நான் தூண்டிவிடவில்லை. தூத்துக்குடி மக்கள் தன்னிச்சையாகவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடினர்.
கிராம மக்கள் முற்றுகை
சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கலவரத்துக்கு காரணம்
22-ஆம் தேதி திமுக சார்பில் தூத்துக்குடியில் அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திமுகவினர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் பழி சுமத்துவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டப்பட்டது. தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் கீதாஜீவன் எம்எல்ஏ என்று கூறுவது வடிகட்டிய பொய் ஆகும்.
அனுதாபம்
போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை முதல்வர் கொச்சைப்படுத்திவிட்டார். துப்பாக்கிச் சூட்டில் மாண்டவர்கள் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாமல் உள்ளார் முதல்வர். காயமடைந்தவர்களுக்கு முதல்வரால் ஆறுதல் கூட கூறமுடியவில்லை. தன்தோல்வியை மறைக்க என் மீது முதல்வர் பழிபோடுவதாக கீதாஜீவன் குற்றச்சாட்டியுள்ளார்.