பாஜகவின் வேட்பாளரை எதிர்க்க பொது வேட்பாளர்தான் சரி… ஜனாதிபதி தேர்தலுக்கு தா. பாண்டியன் ஐடியா
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், பாஜக வேட்பாளரை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரோடு; ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிபிஐயின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவி காலம், வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியாவதை தொடர்ந்து, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பாஜக அவர்களது வேட்பாளரை நிறுத்த கடும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.
570 கோடி
இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் கூறியதாவது: கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாய் 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்டது. அது யாருடைய பணம் என்பது இதுவரை வெளியாகவில்லை.
சிபிஐ விசாரணை
தமிழகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு நிர்வாகம் இல்லை. எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சிபிஐயில் உள்ள அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வருகிறதே? அதற்கு என்ன செய்வது?
தலைகீழா நின்றாலும்…
நீட் தேர்வு வைக்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். மறைமுகமாக இந்தியை திணிக்க பாஜக அரசு வேகம் காட்டி வருகிறது. இந்தியாவை எப்படியாவது காவிமயமாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக அலைகிறது. ஆனால் தலைகீழாக நின்றாலும் இந்தியாவின் கலர் காவியாகாது.
பொது வேட்பாளர்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலையோடு முடிவடைய உள்ளது. நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் மதச்சார்ப்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகாரித்து வருகிறது என்று தா. பாண்டியன் கூறினார்.