அதிமுக பொதுச்செயலரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய முடியும்.. பி.எச். பாண்டியன்
அதிமுக பொதுச் செயலாளரை பொதுக் குழு தேர்ந்தெடுக்க முடியாது என்று பி. ஹெச் பாண்டியன் தெரிவித்தார். கட்சித் தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் சட்டத் திட்டங்கள், கட்சியின் தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பி. ஹெச் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது உடன் இருந்தவர் பி. ஹெச். பாண்டியன். அவரது ஆட்சிக் காலத்தில் சபாநாயகராகவும் பணியாற்றியவர். ஜெயலலிதா மறைந்து 2 மாதங்களுக்கு பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா முதல்வர் ஆவதற்கும், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கும் தகுதியற்றவர் என்று கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
பொதுச் செயலாளர் என்பவர் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. அவர் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அளவில் அதிமுகவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் எக்காலத்திலும், எந்நேரத்திலும் மாற்றப்படவும் கூடாது, திருத்தப்படவும் கூடாது என்று கட்சி விதிகளில் உள்ளது.
எனவே, விதியை மீறி சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க முடியாது. அப்படி வந்தால் அது நிலைக்காது. இதுமட்டுமல்ல. மிடாஸ் மதுபான நிறுவனத்தில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்குதாரர்களாக உள்ளனர். அப்படி பட்ட சசிகலா தமிழகத்தின் முதல்வராவதற்கும் அதிமுகவின் பொதுச் செயலாளராவதற்கும் தகுதி இல்லை என்று பி.ஹெச். பாண்டியன் கூறியுள்ளார்.