கோவையில் உயிருக்கு போராடும் இளம்பெண்: உதவி கேட்டு நிற்கும் தாய்
கோவை: திருப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் என்பவரின் மகள் மீனா நுறையீரல் பிரச்சனை காரணமாக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை காப்பாற்ற மேல் சிகிச்சைக்காக பண உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் (மறைந்த) நாகராஜ் என்பவரின் மகள் மீனா (24) கடும் காய்ச்சல் காரணமாக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி அன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் 10,000 ரூபாய் முன்பணம் கட்டினால் போதும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். பல கட்ட சோதனைகளுக்கு பின்பு நுரையீரலில் நீர் கோர்த்துள்ளது அதை சரி செய்ய வேண்டுமென்றால் ரூ. 2 லட்சம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கும் சரி என்று அவர்களிடம் இருந்த சிறிய வீடு, நிலம், நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் பெற்றும் பல சிரமங்களுக்கு இடையே அந்த தொகையையும் நம்பிக்கையுடன் மருத்துவமனையில் கட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அவரது சிறுநீரகத்தை வைரஸ் தாக்கியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சிறுநீரகங்கள் இரண்டும் செயல்படவில்லை என்றும் இதை சரி செ ய்ய வேண்டுமானால் மேலும் ரூ. 3 லட்சம் கட்டியாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்களாம்.
கணவனை இழந்து பனியன் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் தாயார் பேபி மற்றும் தந்தையாரின் மறைவுக்குப் பின்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை ஓட்டி வந்த ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வந்த சிறுவன் பிரதாப், இவர்களால் இதற்கு மேல் பணம் திரட்ட முடியாமல் வேறு வழியின்றி தவித்து வருவதாக கூறப்படுகின்றது..
எப்படியாவது குணம் பெறச் செய்து எனக்கு எனது மகளை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என்று கெஞ்சி கதறும் அந்த தாயார் கண்ணீர் சிந்தி வருகின்றார்.
மனிதநேயம் மிக்க நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது விருப்பத்தின் பேரில் உதவி செய்யலாம். இது குறித்து மேலும் தகவல் பெற 80566 27808 (பிரகாஷ்) என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.