பத்திரிகையாளர் மதத்தை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்த ஜார்ஜ்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு
Recommended Video
சென்னை: பத்திரிகையாளரிடம் மதத்தின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்.
குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர். இந்த நிலையில், ஜார்ஜ் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் பதற்றத்தோடு காணப்பட்டார். அவர் கூறுகையில்,
பேட்டி
கமிஷனராக நான் இருந்தபோது நானே என் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணை நடத்த முடியாது. எனவே அரசுக்கு பரிந்துரை செய்தேன் என்றார். அப்போது குறுக்கிட்ட, பத்திரிகையாளர் ஒருவர், "2016ம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா குடோனில் சோதனை நடைபெற்றது. செப்டம்பரில் நீங்கள் பதவியேற்றீர்கள். ஆனால் அரசுக்கு டிசம்பரில்தான் கடிதம் எழுதினீர்கள். ஏன் குட்கா ரெய்டு நடந்ததற்கு பிறகு 6 மாதம் தாமதம் செய்தீர்கள்?" என்ற கேள்விக்கு
உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. உங்கள் பெயர் ஷபீர் அல்லவா, நீங்கள் என்மீது ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறீர்கள் என்று பத்திரிகையாளரை பார்த்து பதிலளித்தார்.
மதத்தை இழுத்தார்
மேலும் அந்த பத்திரிகையாளர், 2015ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தேதியில், முன்னாள் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று வருமான வரித்துறை ஆவணத்தில் உள்ளதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "உங்கள் கேள்வி தவறானது. ஏன் முன்னாள் போலீஸ் கமிஷனராக இருப்பவருக்கு பணம் தர வேண்டும். நான் கிறிஸ்தவர். அதற்காக கிறிஸ்துமஸ் தினத்தை சொல்ல கூடாது. நீங்கள் ஒரு முஸ்லீம்" என்றார் ஜார்ஜ்.
சலசலப்பு
அதற்கு பத்திரிகையாளரோ, நான் பத்திரிகையாளராக வந்துள்ளேன். மதத்தை சொல்லாதீர்கள் என்றார். பத்திரிகையாளர்கள் மத்தியில் அப்போது சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஜார்ஜ், "நான் கிறிஸ்தவர். முன்னாள் கமிஷனர். எனவே கிறிஸ்துமஸ் தினத்தை சொல்வதா. பத்திரிகையாளரான உங்களுக்கு ஒருவர் பக்ரீத் தினத்தில் பணம் கொடுத்ததாக குறிப்பிட்டால் அதை ஏற்க முடியுமா?, இந்த விஷயமெல்லாம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்படவில்லை என்றார் ஜார்ஜ்.
பதில் இல்லை
ஆனால் பத்திரிகையாளரோ நான் கூறிய வார்த்தைகள், வருமான வரித்துறை ஆவணத்தில் உள்ளன என்றார். அதற்கு ஜார்ஜ் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள்தான் ஜார்ஜிடமிருந்து வந்தன. ஒருவழியாக பிரஸ் மீட்டை முடிப்பதில் கவனம் செலுத்தியதைதான் பார்க்க முடிந்தது.