குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த காலத்தில் நான் கமிஷனராக இல்லை- ஜார்ஜ் பரபரப்பு விளக்கம்
Recommended Video
சென்னை: குட்கா வியாபாரி குறிப்பிட்ட தேதியில் நான் கமிஷனராக இல்லை என்று குட்கா வழக்கு குறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குட்கா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து குட்கா உரிமையாளர் மாதவராவ் வைத்திருந்த ஒரு டைரி சிக்கியது. அதன் அடிப்படையில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
நேர்மையான அதிகாரிகள்
இதுகுறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தனது நொளம்பூர் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கிரிமினல்கள் காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
பதவியேற்றது
குட்கா வியாபாரி குறிப்பிட்ட தேதியில் நான் கமிஷனராக இல்லை. குட்கா விவகாரத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மட்டுமே சோதனை நடந்தது. அப்போது நான் பதவியில் இல்லை. நான் பதவியேற்றது செப்டம்பரில் தான்.
மனு
33 ஆண்டுகளாக பணியில் இருந்தேன். விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. எம்.எல்.ஏ அன்பழகன் குட்கா முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். குட்கா உற்பத்தியாளர்களிடம் நான் லஞ்சம் வாங்கியதாக மனுவில் கூறியுள்ளார்.
நற்பெயருக்கு
நான் ஆணையராக பதவிக்கு வந்தபோதே குட்கா தொடர்பான வதந்திகள் வந்தன. குட்கா விவகாரம் குறித்து நல்ல அதிகாரியான மாதவரம் துணை ஆணையர் விமலாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். பின்னர் குட்கா முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தேன். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அன்பழகன் எனது பெயரை குறிப்பிட்டுள்ளார் என்றார் ஜார்ஜ்.