சென்னை கமிஷனராக மீண்டும் பதவியேற்பு! குற்ற தடுப்பு நடவடிக்கை தீவிரமாகும்- ஜார்ஜ்!!
தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீண்டும் பழைய பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்காக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஜார்ஜை, முன்னாள் காவல்துறை ஆணையர் திரிபாதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், மாநகரில் குற்ற செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ரயில்வே அதிகாரிகளுடன் காவல்துறையினர் கலந்துகொள்ளும் வாராந்திர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் தேர்தலின் போது மாற்றப்பட்ட நாமக்கல் எஸ்பி செந்தில்குமார், சென்னை தலைமையிட துணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஆகியோர் பழைய பணியிடங்களுக்கே திரும்பினர்.
சேலம் கலெக்டர் மகரபூஷணம்
இதேபோல் சேலம் ஆட்சியராக மகரபூஷணம், வேலூர் மாவட்ட ஆட்சியராக ஆர்.நந்தகோபால், தூத்துக்குடி ஆட்சியராக எஸ்.மதுமதி, ஈரோடு மாவட்ட ஆட்சியர்வி.கே.சண்முகம் பழைய பதவிகளுக்கு திரும்பினர்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹனீஷ் சாப்ரா, தொழில்துறை துணைச் செயலாளராகவும் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் பதவிக்கும் திரும்பினர்.