நான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதி- ஜார்ஜ் பரபரப்பு புகார்
Recommended Video
சென்னை: நான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதிதான் இந்த குட்கா ஊழல் புகார் என்று முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அச்சமயம் குட்கா ஊழலில் தொடர்புடையதாக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் வீட்டில் நடந்த சிபிஐ சோதனையில் வீட்டுக் கடன் பத்திரம் மற்றும் எல்ஐசி பத்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். குட்கா குடோன் என கூறப்பட்ட இடத்தில் நடத்திய சோதனையில் புகையிலைப் பொருள் எதுவும் இல்லை.
குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரம் காவல் ஆணையரின் ஆதரவுடன் மட்டுமே நடக்குமா? குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
நான் டிஜிபி ஆவதைத் தடுக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது. டிஜிபி ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் என்னை இந்த ஊழலில் சிக்க வைத்தனர். இந்த ஊழலில் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு தொடர்பு என்பது எனக்கு தெரியாது.
அதுபோல் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கினார்கள் என்பது எனக்கு தெரியாது என்று ஜார்ஜ் கூறினார்.