சினிமாவுல நடிக்க கூப்பிடுறாங்க.. டிவியில நடிக்க கூப்பிடுறாங்க: வானிலை ரமணன்
சென்னை: சினிமாவில் நடிக்க பல காலமாக அழைப்புவருகிறது என்று மனம் திறந்துள்ளார், சென்னை வானிலை மைய இயக்குநர், எஸ்.ஆர்.ரமணன்.
தற்போதைய சூழ்நிலையில், செய்தி வாசிப்பவர்களைவிட அதிக நேரம் செய்தி சேனல்களில், காட்சியளிப்பவர் சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன்தான்.
பூச்சாண்டி வருது என கூறினால், குழந்தைகள் பயப்படும். மழை வருது.. மழை வருது..என்று ரமணன் சொன்னால்தான் குழந்தைகள் குஷியாகும். லீவு கிடைக்குமேன்னு.
பேட்டி
இப்படி, சச்சினுக்கு பிறகு, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அறிமுகமானவர்தான் ரமணன். அவர் வானொலியொன்றுக்கு அளித்துள்ள கலகல பேட்டியில் இருந்து சில பகுதிகளை பாருங்கள். எனது கடமை, டிவியில் பேட்டி கொடுப்பதோடு முடிந்துவிடும். நானோ, எனது வீட்டில் உள்ளவர்களோ அதை டிவியில் பார்ப்பது கிடையாது.
எரிச்சல் கேள்வி
சில நேரங்களில் நிருபர்கள் கேள்வி கொஞ்சம் பொறுமையை சோதிக்கும். உதாரணத்துக்கு, சார், அந்த புயல் பெயர் 'நிலமா அல்லது நீலமா' என்று கேட்டு நிறைய போன் அழைப்புகள் வந்துள்ளன. நான் நினைத்துக்கொள்வேன், 'வெறும் தாசா அல்லது லாடு லபக்கு தாசா' அப்படீன்னு கேக்குற மாதிரி கேட்கிறார்களே என்று.
டாக்டர். ரமணன்
வானிலை பாடப்பிரிவில் எம்.எஸ்.சி படித்தால், இந்த துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நான் அதை படிக்கவில்லை. இயற்பியல் படித்துள்ளேன். விவேகானந்தா கல்லூரியில் டிகிரி முடித்தேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சியும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பையும் முடித்தேன்.
சான்ஸ் வருது
எனக்கு நடிகைகளில் சாவித்திரி மிகவும் பிடிக்கும். இப்போது என்று கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சினிமாவில் நடிக்க அழைப்புகள் வருகிறது. தொலைக்காட்சி தொடர்களுக்கும் அழைக்கிறார்கள். நான்தான் அழைப்புகளை ஏற்கவில்லை.
இன்னும் 2 வருஷம்
நான் ஒரு அரசு ஊழியர். அந்த வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறேன் என்று கூறும் ரமணன், பதவிக்காலம் இன்னும் 2 வருடங்கள் உள்ளனவாம். அதன்பிறகுதான் ஓய்வு பெறப்போவதாக கூறி, குட்டீஸ் மனதை குதுகலிக்க வைத்துள்ளார் ரமணன்.