இது துரதிஷ்டவசமான சம்பவம்… டிஎன்ஏ சோதனைக்குப் பின் விமானிகளின் பெற்றோர்கள் கண்ணீர்
சென்னை: டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளின் பெற்றோர்களுக்கு நேற்று இரவு சென்னை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்றது. மகன் திரும்ப வந்துவிடுவான் என்று எதிர்பார்த்த நிலையில் மூவரும் உயிரிழந்து விட்டது ஒரு துரதிருஷ்டமான சம்பவம் என்று விமானிகளின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘டோர்னியர்' விமானம் கடந்த மாதம் 8ம் தேதி பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது மாயமானது. அதில் பயணம் செய்த வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 விமானிகளும் மாயமானார்கள். பின்னர் அந்த விமானம் கடலில் விழுந்தது தெரியவந்தது. 32 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கடந்த 10ம்தேதி மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி, உதிரி பாகங்கள் மீட்கப்பட்டன. கருப்பு பெட்டி மீனம்பாக்கத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடந்த தேடுதலில் 3 விமானிகளின் எலும்புகள் மீட்கப்பட்டன. எலும்புகளை வைத்து விமானிகளின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அவர்களது பெற்றோர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக விமானி வித்யாசாகரின் தந்தை சன்னியாசி ராவ் (வயது 74), விமானி எம்.கே.சோனியின் தந்தை ஆர்.எஸ்.சோனி, சுபாஷ் சுரேசின் தந்தை சுரேஷ், தாயார் பத்மா, மனைவி தீபலட்சுமி ஆகியோர் வியாழக்கிழமை இரவு சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். விமான விபத்தில் பலியான விமானிகளின் தந்தையரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.சோனியின் தந்தை ஆர்.எஸ்.சோனி, விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்கடிகாரம் என்னுடைய மகன் எம்.கே.சோனியுடையது. கடிகாரத்தை வைத்து என் மகன் இறந்ததை உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் சட்ட விதிகளின்படி இந்த மரபணு சோதனைக்காக வந்திருக்கிறேன். நடந்த சம்பவம் ஒரு துரதிருஷ்டமான சம்பவம் என்று கூறினார். கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட மத்திய அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இருந்தது'' என்றும் அவர் தெரிவித்தார்.
விமானம் கடலில் விழுந்தாலும் நீச்சல் தெரியும் என்பதால் மூவரும் தப்பியிருக்கக் கூடும் என்று விமானிகளின் குடும்பத்தினர் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்யாகிப் போனதுதான் சோகம். மூவரின் எலும்புக்கூடுகளை மட்டுமே மீட்க முடிந்தது.