"அச்" என்று தும்மும்போது மூக்குக்குள் போய் விட்ட மூக்குத்தி திருகாணி..!
சிவகங்கை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு பெண் தும்மும்போது அவரது மூக்குத்தியின் திருகாணி மூக்குக்குள் போய் விட்டது. இதனால் பெரும் சிரமத்தைச் சந்தித்த அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலமாக திருகாணியை வெளியே எடுத்து நிம்மதி கொடுத்துள்ளனர் டாக்டர்கள்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (33). இவருக்குத் திருமணமாகி விட்டது. கணவர் மாடசாமியுடன் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி தும்மும்போது அவரது மூக்குத்தியின் திருகாணி மூக்குக்குள் போய் விட்டது. ஆனால் அவருக்கு எந்த உறுத்தலும், வலியும் இல்லை. இதனால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.
ஆனால் போகப் போக அவருக்கு அடிக்கடி சளி பிடித்துள்ளது. தும்மலும் வர ஆரம்பித்தது. சில நாட்களுக்கு முன்பு தும்மல் அதிகமாக இருந்தது. இதையடுத்து தனது அம்மா வீடு உள்ள சிவகங்கைக்கு வந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். டாக்டர்கள் அவருக்கு சோதனைகள் நடத்தினர்.
ஸ்கேன் செய்தபோது அவரது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் குழாய் பிரியும் இடத்தில் திருகாணி சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை நவீன ஆபரேஷன் மூலம் வெளியில் எடுக்க முடிவு செய்தனர் டாக்டர்கள். நேற்று அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருகாணியும் வெளியில் எடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக திருகாணி, நுரையீரல் குழாய்க்குள் போகவில்லை. போயிருந்தால் பரமேஸ்வரியின் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது பரமேஸ்வரி இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.