திடீர் திடீர்னு மயங்கி விழும் மாணவர்கள்.. 'பேய்' உலாவும் பள்ளி... தலைவாசல் அருகே ஒரு பரபரப்பு!
சேலம்: சேலம் தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவ-மாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவதால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலுமிச்சைப்பழத்தை கொடுத்தனுப்புகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஒரு ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்கள் மயக்கம்
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். மேலும், அவர்களின் உடல் அசாதாரணமான முறையில் உடம்பை முறுக்கியபடி காணப்பட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ-மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குபடி கூறி இருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை
அதன்படி, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கூறி இருக்கிறார்கள். மாணவ-மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர்.
மீண்டும் மயக்கம்
இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர்களில், அரவிந்த், தமிழ்செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரியர்கள், அந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க சொல்லி இருக்கின்றனர்.
பரவிய பேய் பீதி
இந்த செய்தி அந்த கிராமம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதில் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
எலுமிச்சை - வேப்பிலை
பீதியடைந்த சில பெற்றோர்கள், கோவிலில் மந்திரித்த வேப்பிலை, எலுமிச்சைப்பழத்தை குழந்தைகளின் புத்தகப்பையில் போட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அதேசமயம் பேய் நடமாடுவதாக கூறி புரளியை கிளப்பிவிடுகின்றனர் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதமுத்து.
ஆனாலும் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் அடிக்கடி மயங்கி விழுவதும், வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.