திமுக-காங். கூட்டணி பேச்சுவார்த்தை: கருணாநிதியை பிப்.13-ல் சந்திக்கிறார் குலாம்நபி ஆசாத்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் வரும் 13-ந் தேதி சென்னை வந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் என முதலில் கூறப்பட்டது. இதனிடையே திடீரென திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையக் கூடும் என செய்திகள் வெளியாகின.
இதனை திமுகவில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி அமையும் எனவும் கூறி வருகின்றனர்.
காங். கூட்டணி
கடந்த 2004 லோக்சபா தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து 2013-ல் திமுக வெளியேறியது.
தனித்து போட்டி
இதனால் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4.3% வாக்குகளை மட்டும் பெற்றது. இந்நிலையில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கருணாநிதி அழைப்பு
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் இடம் உண்டு என கருணாநிதி ஏற்கனவே பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
குலாம் நபி வருகை
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், வரும் 13-ந் தேதி சென்னை வருகிறார்.
சென்னையில் 13-ந் தேதி திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக குலாம்நபி ஆசாத் பேசுவார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.