கூட்டணி குறித்து முடிவு செய்ய குலாம்நபி ஆசாத் பிப்.13-ல் சென்னை வருகை: குஷ்பு
கோவை: தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வரும் 13-ந் தேதி சென்னை வருகை தர உள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக இருக்கிறது. இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தமிழகத்துக்கு நாளை மறுநாள் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து இரு கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, வரும் 13-ந் தேதியன்று குலாம்நபி ஆசாத் தமிழகம் வருகை தருகிறார். தமிழகத்தில் கூட்டணியை முடிவு செய்வதற்காக அவர் வருகை தர உள்ளார் என்றார்.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திமுகவுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து யாராவது பேசுவார்கள்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இன்று வெளியாகும் என்றார்.