சென்னை வந்தார் குலாம்நபி ஆசாத்... கருணாநிதியுடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. திமுக- காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி ஏற்படும் என்றும் திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் வரும் 20-ந் தேதி தேமுதிகவின் மாநாட்டில் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிக்கும் வரை இந்த குழப்பம் நீடிக்கவே செய்யும் எனத் தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. குலாம்நபி ஆசாத் சந்தித்துவிட்டுப் போனாலும் கூட காங்கிரஸ் கட்சியுடன் உடனே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தாது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிகவின் உறுதியான அறிவிப்பைத் தொடர்ந்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.