சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: வரும்.. ஆனா வராது!
சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் போடப்பட்ட முதலீடுகள் வருவதற்கு இன்னும் பல படிக்கற்கள் உள்ளன. அதற்கு முன்பாக இத்தனை லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று வெளியே சொல்வது முதிர்ச்சியில்லாத்தனம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்த இரு நாள் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தனது நிறைவுரையில் அறிவித்தார்.
வாக்குறுதிதான்
உண்மையில், முதலீடு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதுதான் அறிவிப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், முதலீடுகளுக்கான வாக்குறுதிதான் வந்துள்ளதே தவிர, முதலீடு, ரொக்கமாகவோ, காசோலையாகவோ வரவில்லை.
வரவில்லையாம்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1,000 பேரும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3,000 பேரும் மாநாட்டுக்கு வந்திருந்ததாக அரசு புள்ளி விவரம் கூறியது. ஆனால் அந்த அளவுக்கு முதலீட்டாளர்கள் வரவில்லை என்று கள நிலவரம் கூறுகிறது.
முன்னேறிய நாடுகள்
கனடா, பிரான்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தைவான், பிரிட்டன் கூட்டமைப்பு நாடுகளில் இருந்து சில முதலீட்டாளர்கள் வந்திருந்தனர். அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளில், இருந்து எந்த முதலீட்டாளரும் இதில் பங்கேற்கவில்லையாம்.
தெரிந்த முகங்கள்
குறிப்பிட்டு சொல்லும்படியான முதலீட்டாளர்களான, ஹெச்.சி.எல் நிறுவன இயக்குநர் ஷிவ் நாடார், அப்போலோ மருத்துவமனையின், பிரதாப் ரெட்டி, அதானி குழுமத்தின் அதானி, மதுரை தியாகராஜ மில்ஸ் அதிபர் கரு.முத்து கண்ணன், டி.வி.எஸ் குழுமத்தின் வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன் ஆகியோர்தான் பளிச்சென கண்களுக்கு தெரிந்தனர். இவர்கள் ஏற்கனவே தமிழகத்தில் தொழில் தொடங்கியவர்கள்தானே தவிர தமிழகத்துக்கு புதுமுகங்கள் இல்லை.
அண்டை மாநிலங்கள் நடத்தியது
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் நமது பக்கத்து மாநிலங்களை சேர்ந்த இதுபோன்ற முதலீட்டு மாநாடுகளை நடத்திய அனுபவம் உள்ளவர்கள். அவர்களும் இது வெறும் கண்துடைப்புதான் என்று சொல்லி, இப்போது மாநாடு நடத்த முனைவதில்லை.
ஸ்டெப் பை ஸ்டெப்
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வத்தைத் தெரிவித்த முதலீட்டாளர்கள், தமிழக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டு தங்கள் நாடுகளுக்குச் சென்று, அங்கு அவர்களின் நிர்வாகிகளோடு இவற்றைப் பற்றி விவாதித்து, அதன்பிறகு அவர்கள் ஒரு குழுவை அனுப்பி தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை, மற்ற சாதக பாதக அம்சங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள்.
ஏகப்பட்ட தூரம்
அந்த அறிக்கை திருப்தி அளித்தால், அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். அதில் உடன்பாடு ஏற்பட்டால், புரிந்து உணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதன்பிறகுதான் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை தமிழகத்துக்குள் கொண்டுவருவார்கள்.
தேர்தலுக்காக வெய்ட்டிங்
எனவே இப்போதே மாநாடு வெற்றியடைந்துவிட்டதாகவும், ரூ.2.42 லட்சம் கோடியை திரட்டி விட்டதாகவும் கூறுவது சிறப்பானதன்று. வாக்குறுதி கொடுத்த தொழிலதிபர்களிடம் பலரும் பொதுத் தேர்தலுக்கு பிறகே முதலீடுகளுக்கு ஓ.கே. சொல்ல காத்திருக்கின்றனராம்.