ஊழல் கறை படித்துள்ள தமிழக நிர்வாகம்.. என்ன செய்ய வேண்டும் கிரிஜா வைத்தியநாதன்?
புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சிறப்பாக செயல்பட்டு ஊழல் கறை படிந்த தமிழக நிர்வாகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று பொறுப்பேற்றுள்ளார். முந்தைய தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டிலும் அவரது தலைமைச் செயலக அறையிலும் ஐடி ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உண்மையிலேயே இப்போதுதான் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுத்து தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக புழகாங்கிதம் அடைந்துள்ளனர் தலைமைச் செயலக ஊழியர்கள்.
1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜ் அதிகாரியான கிரிஜாவை ஓவர் டேக் செய்து, பைபாஸ் ரூட்டில் தலைமைச் செயலர் ஆக்கப்பட்டவர்தான் 1985ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான, ராம மோகன் ராவ்.
ஜெயலலிதாவின் விருப்பம்
முந்தைய முதல்வர் ஜெயலலிதா விருப்பப்பட்டே இந்த சீனியாரிட்டி விதிமீறலை செய்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒரு வகையில் அமைச்சர்களை போலவே இறுக்கமான சூழலில் வைக்கப்பட்டிருந்தனர். தலைமைச் செயலர்தான் ஒட்டு மொத்த மாநில அதிகாரிகள் அனைவருக்கும் தலைவர். அது ஐபிஎஸ் முடித்த டிஜிபியோ அல்லது ஐஏஎஸ் படித்த எந்த துறை முதன்மை செயலரோ.., தலைமைச் செயலர்தான் அவர்களுக்கெல்லாம் பாஸ்.
அதிகாரிகளுக்கு கிலி
ஆனால் தலைமைச் செயலரையும் கட்டுப்படுத்தும் வகையில் ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஆலோசகர் பதவி வழங்கி அதிகாரிகள் மட்டத்தில் ஒரு நடுக்கத்தை வைத்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது காலம் மாறியுள்ளது.
காலம் மாறிப்போச்சு
அமைச்சர்களே டிவி லைவ் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது இந்த இரு வாரங்களில். இப்போது அதிகாரிகள் கைகள் சுதந்திரமாக உள்ளன. லஞ்சம், லாவண்ய அதிகாரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதால் சலாம் போட்டுவந்த அவல நிலையில் இருந்து ஓரளவுக்கு தப்பிக்க நேர்மையான அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நேர்மை
இந்த சுதந்திர சூழலில் நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலராகியுள்ளது தமிழர்கள் செய்த புண்ணியம்தான். ஏனெனில் இப்போது ராம மோகன ராவ் போன்ற அதிகாரிகள் கையில் தலைமை நிர்வாகம் சிக்கியிருந்தால் தமிழகம் மொத்தமாக அடமானம் வைக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இமாலய பணி
இப்போது கிரிஜா வைத்தியநாதன் முன்னால் இருப்பது மாபெரும் பணி. ஊழல் பெருச்சாலி என ஊடகங்கள் வர்ணிக்கும், ராம மோகன் ராவ் இருந்த இடத்தை சுத்தப்படுத்துவது இமாலய பணியாக இருக்கப்போகிறது கிரிஜா வைத்தியநாதனுக்கு. தனக்கு ஏற்ப வளையும் அதிகாரிகள் வட்டாரத்தை கட்டி எழுப்பியிருப்பார் ராம மோகன ராவ். அதை உடைத்து எறிந்து, நல்ல அதிகாரிகள் லாபியை உருவாக்க வேண்டிய பொறுப்பு கிரிஜாவுக்கு உள்ளது. அல்லது ஓட்டைப் பானையில் ஊற்றப்படும் நீராக முயற்சிகள் அனைத்தும் வீணாகும்.
ஐடிதுறையிடம் ஆட்சியாளர்கள்
ஆட்சியாளர்கள் மட்டத்தில் இருந்து மற்றொரு ராம மோகனாக கிரிஜாவை உருவாக்க நெருக்கடிகள் வரும். ஆனால் ஐடி துறையினரின் கைகளில் ஆட்சியாளர்கள் பலரின் குடுமிகள் இருப்பதால் அதிகமாக ஆட்டம் இருக்காது என்பது கிரிஜாவுக்கு ஆறுதல் செய்தி.
மக்கள் நலன்
சுகாதாரத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிரிஜா வைத்தியநாதன். நலவாழ்வு பொருளாதாரத்தில் (Health Economics) பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். உடல் நோய்களில் இருந்து மட்டுமல்ல லஞ்ச, லாவண்ய புற்றுநோயிலிருந்தும் மக்கள் நலம் வாழ கிரிஜா வைத்தியநாதன் சாட்டையை கையில் எடுக்க வேண்டிய நேரம் இது.
அதிகாரிகளின் லாபி
ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து ஊழலுக்கு துணை போக ஆரம்பித்துவிட்டார்கள் என்பது பரவலாக குற்றச்சாட்டாக உள்ளது. அதன் உச்சம்தான் ராம மோகன ராவ். முன்னணி பத்திரிகையொன்று, ஒருமையில் ராம மோகன் ராவை பற்றி செய்தி வெளியிடும் அளவுக்கு, அவர் ஊழலில் ருத்ர தாண்டவமே ஆடியுள்ளதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மன்னார்குடிக்கு செக்
கிரிஜாவை தலைமைச் செயலாளராக நியமித்ததில் மத்திய அரசு கைவண்ணம் இருப்பதாக கூறுகிறார்கள். இதன்மூலம், மன்னார்குடி கோஷ்டிக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. முதல்வரை மிரட்டி காரியம் சாதிக்க மன்னார்குடி கோஷ்டி முயன்றாலும், அவரது உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடிக்க கிரிஜா வைத்தியநாதனால் முடியும். "கிரிஜா மத்திய அரசின் நேரடி சாய்ஸ். என்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது" என மன்னார்குடி கோஷ்டியிடம் நல்லபிள்ளையாக பன்னீர்செல்வம் நழுவிக்கொள்ளவும் இது ஒரு அரிய வாய்ப்பு.
அதிகாரிகள் அரண்
இப்படி ஒரு நல்ல சூழலை பயன்படுத்தி, சகாயம் போன்ற நற்பெயர் ஈட்டிய அதிகாரிகளை கொண்ட அரணை அமைத்து, பதவி காலம் முடிய 2வருடமே பாக்கியுள்ள கிரிஜா வைத்தியநாதன் சிறப்பாக பணியாற்றி தமிழக மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதே சாமானியர்கள் கோரிக்கை.