கடினமான கணிதத்தேர்வு... சிதம்பரம் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை
சிதம்பரம்: ப்ளஸ் டூ கணிதக் கேள்வித்தாள் கடினமாக இருந்த காரணத்தால் தேர்வை சரியாக எழுதாத மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளஸ் டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு வேதியியல் தேர்வு, கணிதத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் சிதம்பரம் நந்தனார் பள்ளியில் பயிலும் மாணவி அக்ஷயா என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன்-செல்வி தம்பதியினருக்கு 4 மகள்கள். இவரது மகள்களில் அக்ஷயா மற்றும் அகிலா ஆகிய இருவரும் சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் தங்கி அப்பள்ளியிலேயே அகிலா 9ம் வகுப்பும், அக்ஷயா பிளஸ் 2 படித்து வந்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டவந்த அக்ஷயா கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக சக மாணவியரிடம் கூறி வந்ததாகவும், எனவே மதிப்பெண் குறையக்கூடும் என கூறி சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென விடுதி அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து சக மாணவியர் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து மாணவி இருந்தது தொடர்பாக விடுதிக்குச் சென்ற சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, அறையில் தங்கியிருந்த சக மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ப்ளஸ் டூ வேதியியல் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் இரண்டு மாணவிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.