பள்ளியில் ராகிங்: சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை
சென்னை: சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மாணவியின் பெயர் கார்த்திகா என்பதாகும். இவர் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 27-வது தெருவில் வசிக்கும் ரவி (50). என்பவரின் மகளாவார்.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்றிரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் 2 மாணவிகள் உட்பட 4 மாணவர்கள் கிண்டல் செய்ததன் விளைவாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக மாணவர்கள் கிண்டல்
கார்த்திகாவுடன் படிக்கும் சில மாணவ, மாணவிகள் தினசரி கேலி செய்து வந்துள்ளனர். இதனை தனது தாய் ஜெயபாரதியிடம் இது குறித்து கூறி கார்த்திகா அழுதுள்ளார். ஜெயபாரதி உடனே பள்ளி முதல்வரை சந்தித்து புகார் கூறியிருக்கிறார். பின்னர் கார்த்திகாவை ஜெயபாரதி சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
தாயிடம் புகார்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் சக மாணவர்கள் கார்த்திகாவை கிண்டல் செய்தனராம். மறுநாள் நடந்த பெற்றோர் கூட்டத்தில், மாணவ, மாணவியர் கேலி செய்ததால் மகள் பாதிக்கப்பட்டது குறித்து கூறி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாய் ஜெயபாரதி வலியுறுத்தினார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் பள்ளிக்கு செல்ல விரும்பாமல் கார்த்திகா, வீட்டிலேயே இருந்துள்ளார். வழக்கம்போல் அவரது தந்தை ரவி வேலைக்கு சென்றுள்ளார். இரவில் ஜெயபாரதி கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா, திடீரென்று அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவல் நிலையத்தில் புகார்
வீட்டுக்கு திரும்பி வந்த ஜெயபாரதி, மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசில் புகார்
சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் காவல்துறையினர், கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மகள் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுங்கையூர் காவல் நிலை யத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
பள்ளிக்கு விடுமுறை
பள்ளி முதல்வரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மறியல் பதற்றம்
பள்ளி முதல்வரை உடனே கைது செய்யக்கோரி கொடுங்கையூர் காவல் நிலையம் அருகில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர். பின்னர் கார்த்திகாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வரையில் கார்த்திகாவின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
முதல்வர் அலட்சியம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் ஜெயபாரதி, கார்த்திகாவை சக மாணவர்கள் கிண்டல் செய்வது தொடர்பாக பள்ளி முதல்வரிடம் பலமுறை புகார் அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எங்களை அலட்சியப்படுத்தினார். கடைசிவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இன்று என் மகள் தற்கொலை செய்துகொண்டார். எனவே பள்ளி முதல்வர் மீதும், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மீதும் போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிர்வாகம் பொறுப்பல்ல
இந்த நிலையில் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்று பள்ளி முதல்வர் சுந்தரதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.