செல்போனில் பேசாதே - திட்டிய தாயார்; தீக்குளித்த 9ம் வகுப்பு மாணவி
திருச்சி: திருச்சி அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை தாயார் கண்டித்ததால் 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தைச் சேர்ந்தது திருவெள்ளறை கிராமம். இங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் ரெங்கசாமி மற்றும் மூக்காயி. இவர்களுக்கு கண்ணன் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். ரம்யா அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ரெங்கசாமி பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் மூக்காயி சித்தாள் வேலை செய்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தங்களது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
மூக்காயி தினமும் காலையில் 7.30 மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு இரவுதான் வீட்டுக்கு திரும்புவார். குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்புவர். மூக்காயி நேற்று காலை சுனைபுகநல்லூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்து ஒரு கட்டை பையில் மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி ஆகியவற்றை ஒரு கட்டை பையில் எடுத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள வெள்ளை பாறைக்குச் சென்றார்.
பாறை உச்சியில் சிறிது நேரம் யோசித்தவாறே அங்கேயே உட்கார்ந்திருந்தார். பின்னர் பாறையில் இருந்து கீழே இறங்கி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பரவியவுடன் ரம்யா கதறி துடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ரம்யா தீ வைத்துக் கொண்டதால் ரம்யாவின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அதனால் யாரும் அவரை காப்பாற்ற வாய்ப்பு இல்லாமல் ரம்யா எரிந்து கரி கட்டையானார். ரம்யா ஓடிய இடமெல்லாம் நெருப்பு பற்றி எரிந்து கிடந்தது. மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி, பை ஆகியவை பாறையிலும் கீழேயும் கிடந்தன.
தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். புலிவலத்தைச் சேர்ந்த ஒருவருடன் ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரம்யா வீட்டு செல்போனை அவர் தெரிந்து கொண்டு யாரும் இல்லாத நேரத்தில் ரம்யாவுக்கு போன் பேசி வந்துள்ளார். இது மூக்காயிக்கு தெரிய வந்ததால், "அப்பா போய் விட்டார், உங்களை நான் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன், செல்போனில் யாரிடமும் பேசி சிக்கிக் கொண்டு வாழ்க்கையை வீணடித்துவிடாதே" என்று ரம்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் வீட்டுக்கு போன் வந்து ரம்யா எடுத்து அந்த நபருடன் பேசியுள்ளார். அதனால் வீட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் இருந்தவர்கள் ரம்யாவை திட்டியுள்ளனர். இதனால் மனம் உடைந்த ரம்யா தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரம்யா பேசி வந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறப்படுகிறது. அதனால் ரம்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அந்த நபரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.