குரூப் 4 விடைத்தாளுடன் மாயமான பெண்: போலீஸ் விசாரணை
சென்னை: குரூப் 4 தேர்வு எழுத வந்த பெண், விடைத்தாளுடன் மாயமான விவகாரத்தின் பிண்ணனியில் உள்ள மர்மம் குறித்து சென்னை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 25ம் தேதி, தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுகள் நடை பெற்றன. சென்னை பிராட்வே தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் ரேவதி என்ற பெண்ணும் கலந்து கொண்டு தேர்வெழுதினார்.
தேர்வு நேரம் முடிவடையும் முன்னதாகவே, தேர்வு அறையை விட்டு ரேவதி வெளியேறியதாகத் தெரிகிறது. ஆனால், வெளியே செல்லும் போது, விடைத்தாள்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், தன் கையோடு எடுத்துச் சென்றுவிட்டாராம்.
என்ன காரணத்திற்காக ரேவதி விடைத்தாளை எடுத்துச் சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியைத் தேடி வருகின்றனர்.