வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் வந்து போராடு... மாணவியின் ஆவேசம்
வேடிக்கை பார்க்காமல் வீதிக்கு வந்து தமிழக மக்கள் போராட வேண்டும் என்று கோவை வ.உசி. மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவி ஒருவர் கூறினார்.
கோவை: இந்தப் போராட்டத்தை சாதாரணமாக பார்க்காதீர்கள். இது தொடக்கப் புள்ளிதான். இனி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிப்போம் என்று கோவை வ.உ.சி மைதானத்தில் இரவு முழுவதும் நடந்த போராட்டத்தின்போது மாணவியர் ஆவேசமாக கூறியது அனைவரையும் தட்டி எழுப்புவதாக உள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெருவில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் பல நகரங்களிலும், மாவட்டங்களிலும் பரவியுள்ளது. அலங்காநல்லூரில் சிறு பொறியாக கிளம்பிய இப்போராட்டம் தற்போது சென்னை மெரீனா, கோவை வ.உ.சி. மைதானம் என பரவியுள்ளது.
கோவையில் கூடியுள்ள மக்களில் பெரும் திரளானவர்கள் பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள். தங்களது போராட்டம் ஏதோ ஒரு கோரிக்கைக்காக அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விடிவுக்காக என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
போராட்டக் களத்தில் நேற்று முழுவதும் விடிய விடிய அமர்ந்திருந்த ஒரு மாணவி கூறுகையில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் இனி மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிப்போம். இதுதான் தொடக்கப் புள்ளி. எங்களுடன் யாரும் பேச்சு நடத்தத் தேவைில்லை. யாரும் பேச்சு நடத்த வர வேண்டாம். வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும். அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வரை நகர மாட்டோம். ஒரு நடிகருக்காக சுப்ரீம் கோர்ட் பல மணி நேரம் உட்கார்ந்து விசாரிக்கிறது. இதற்காக உட்கார முடியாதா.
இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும்தான். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டுள்ளோம். வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் வந்து போராடு என்று ஆவேசமாக கூறினர்.
புகைப்படம்: பேராசிரியர் கே.கே.நடராஜன்