விழலுக்கு இறைத்த நீராகும் உதவிகள்... வேறு நிவாரணப் பொருட்களும் தரலாமே ப்ளீஸ்!
சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் ஒரே நேரத்தில் தேவையை விட அதிகமாக உணவுப் பொருட்கள் உதவியாக கிடைப்பதால், அவை வீணாகும் நிலை காணப்படுகிறது.
சென்னையைப் புரட்டி போட்ட மழையால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்ப வீட்டை விட்டு அணிந்திருந்த உடைகளோடு வெளியேறிவர்கள் அதிகம். மாற்று உடை கூட இல்லாத நிலையில் இவர்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, வெளியூர்களில் இருந்து தொடர்ந்து நல்மனம் படைத்த மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.
உணவுக்கு முக்கியத்துவம்...
இவர்களில் பெரும்பாலானோர் உணவு, உடை, உறைவிடம் என்ற பட்டியலில் முதலில் இடம் பெறும் உணவுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாப்பாடுகளுடன் சென்னை வரும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை வினியோகிக்கின்றனர்.
வீணாகும் அவலம்...
ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால், ஒரே இடத்தில் உணவுப் பொருட்கள் குவிகின்றன. அவற்றை சேமித்து வைக்கவும் முடியாத நிலையில் மக்கள் சிக்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான உணவுப் பொருட்கள் குப்பைகளில் கொட்டப்படும் நிலைக் காணப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்...
தானத்தில் சிறந்தது அன்னதானம் என கருதும் அன்பர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பு வைத்துப் பயன்படுத்தும் உணவுகளை விநியோகித்தால் அது மேலும் உதவிகரமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு...
அதேபோல், உணவு தவிர குழந்தைகளுக்குத் தேவையான பால், மருந்துகள், டயாப்பர்ஸ், மாற்றுத் துணிகள் போன்றவையும் தரலாம்.
கொசுவலைகள்...
குளிரோடு கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால், கொசுவலைகளையும் நிவாரணப் பொருளாக தரலாம்.
உடைகள்...
பெரும்பாலானோர் வேறு உடை கூட இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனால் சேலை, வேட்டி, சட்டை, உள்ளாடைகள், குழந்தைகளுக்கான பேண்ட்ஸ், ஜீன்ஸ்களை தந்தால் உதவியாக இருக்கும்
மேலும் மின்சாரம் இன்றி மக்கள் வாழும் பகுதிகளில் மெழுகுவர்த்திகளை வழங்கினால், அது உதவிகரமாக இருக்கும்.