திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும்… பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள்!: இல. கணேசன்
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சற்று முன் திருச்சி வந்தார். அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை போன்று அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்துள்ளனர்.
மாநாட்டு துவக்கத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது:
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றிய நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வார்.
பத்தாண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. அதை மீட்பதற்கு சரியான தலைவர் நரேந்திரமோடிதான்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்தது போதும். இனி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.
மோடி வருகையை ஒட்டி மாநாடு நடைபெறும் பகுதியில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 36 கேமராக்கள் மூலமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 பாதுகாப்பு மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு கட்ட சோதனைக்கு பிறகே மாநாட்டு அரங்கிற்குள் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.