ஜெ. சிகிச்சை சிசிடிவி காட்சிகளை 7 நாளில் அளிக்க வேண்டும்.. அப்போலோவிற்கு விசாரணை ஆணையம் செக்!
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் ஜெ.தீபாவிடம் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை. 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும்.
சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் என்று கூறவேண்டும். செப். 22-ல் பேஸ்மேக்கர் பொருத்தபட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என செய்திக்குறிப்பு வெளியிட்டது ஏன்?. அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார். மேலும் அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது?
இதனால் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து உயிரிழந்த நாள் வரை பதிவான காட்சிகளை அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆணையிட்டுள்ளது.