நவம்பர் 3-ல் புதிய முடிவு! - இளங்கோவனை வாழ்த்திய பின் ஜி கே வாசன் பேட்டி
சென்னை: காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ஜிகே வாசன், வரும் நவம்பர் 3-ம் தேதி புதிய முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலகியது, ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டது என்று பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
ஜிகே வாசன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவரது தலைமையில் மீண்டும் தமாகா உதயமாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதும் முதல் ஆளாக சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஜிகே வாசன்.
வாழ்த்திய கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், கட்சி மேலிடம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
அவர் கூறுகையில், "சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தலைமையின் செயல்பாடு தொண்டர்களின் மனநிலைக்கு மாறாகவே உள்ளது. கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்களைச் சேர்க்க காங்கிரஸ் மேலிடம் யோசித்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக காங்கிரசை மேலிடம் கண்டு கொள்ளவில்லை.
தமிழகம் முழுவதும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் தொடங்குவது தொடர்பான சூழல் ஏற்பட்டால் தெரிவிப்பேன். நவம்பர் 3ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்," என்றார்.