ஜல்லிக்கட்டுக்குத் தொடர் தடை.. உள்நோக்கம் உள்ளதா என சந்தேகம் வருகிறது- ஜி.கே.வாசன்
ஜல்லிக்கட்டுக்குத் தடை தொடர்வதில் உள்நோேக்கம் உள்ளதா என்றசந்தேகம் வந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை: பொங்கல் வாழ்த்துச் செய்திகள் வருவதற்கு முன்பு துயரச் செய்தி வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் தொடர்ந்து தடை நீடிப்பது, அதில் உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3வது ஆண்டாக இந்த ஆண்டும் சட்டப்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இதுகுறித்துக் கூறுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பு வேதனை அளிக்கிறது. பொங்கல் வாழ்த்து வர வேண்டிய நேரத்தில் துயரச் செய்தி வந்துள்ளது. மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயகம் இருக்க வேண்டும்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். மாநில அரசும் தக்க நேரத்தில் முறையாக அது நடப்பதற்கு வலு சேர்த்திருக்க வேண்டும். இது வேதனை தருவதாக உள்ளது.
ஒரு பக்கம் விவசாயிகள் வறட்சியில் வாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதில் உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டியது உரியவர்களின் கடமையாகும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.