மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் : ஜி.கே. வாசன்
மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.
மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும், கோவிலின் பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தபட வேண்டுமென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டு உள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து மதுரைக்கு வந்து இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் உடனடியாகப்புதுபிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் பெயர் மாற்றம் தேவை இல்லாத ஒன்று. தொடர்ந்து தமிழர்களுக்கு அநீதி இழைப்பதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது. காவேரி நீர் தற்போது தமிழகத்திற்கு தேவையான ஒன்று, மத்திய பாஜக அரசும். கர்நாடக காங்கிரஸ் அரசும் காவேரி நீர் வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கின்றது என்று வாசன் குறிப்பிட்டு உள்ளார்.