மீண்டும் அண்ணாமலை சைக்கிள்!' - ஜி.கே.வாசனின் 'திடீர்' நம்பிக்கை
மீண்டும் அண்ணாமலை சைக்கிள் மீது ஜிகே வாசன் திடீரென நம்பிக்கை கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ' தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துவிட்டால், அடுத்தகட்ட வாய்ப்பு ரஜினியுடன்தான்' என உறுதியாக நம்புகிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். ' அண்ணாமலை படத்தின் சைக்கிள் சின்னத்தை 96 தேர்தலில் பயன்படுத்தி வெற்றி கண்டோம். இந்தமுறையும் அவர் எங்களுக்குக் கை கொடுப்பார்' என நம்புகிறார் வாசன்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. ' இந்தத் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்த ஜி.கே.வாசன், ' காலா படத்தை வெளியிடுவதற்கு முதல்வர் குமாரசாமி உதவ வேண்டும்' எனப் பேசினார்.
தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகள்கூட அமைதியாக இருக்கும் வேலையில், வாசனின் இந்தக் கருத்தை பெரிதும் ரசித்திருக்கிறார் ரஜினி. இதைப் பற்றி நம்மிடம் பேசினார் த.மா.கா மாநில நிர்வாகி ஒருவர், " ரஜினி கூட்டணியைத்தான் நாங்கள் பெரிதும் நம்புகிறோம். காங்கிரஸைவிட த.மா.கா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.
போராட்டமே கூடாது என சொல்லவில்லை
அனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் பங்கெடுத்து வருகிறோம். ரஜினிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், 'தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர்' எனக் கூறினார். 'போராட்டமே கூடாது' என அவர் சொல்லவில்லை. இந்தக் கருத்தை வாசனும் வரவேற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக சீட்டைக் குறைக்கும் முயற்சியில் தி.மு.க இறங்கும். அப்போது தேவைப்பட்டால் காங்கிரஸை வெளியேற்றிவிட்டு, த.மா.காவைச் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு அதிகம்.
கனிமொழி மூலமாக திமுகவுக்கு நெருக்குதல்
திருமாவளவனை வைத்து தி.மு.கவை மிரட்டிப் பார்ப்பதுபோல வரும் நாட்களில் இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஜி.கே.வாசனை அழைத்துப் பேசினார் ஸ்டாலின். அப்போது கருணாநிதியும் நல்லநிலையில் இருந்தார். இதனை எதிர்பார்க்காத காங்கிரஸ் தலைவர்கள், கனிமொழி மூலமாக தி.மு.க தலைமைக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
காலா படத்துக்கு பிரச்சினை
இதன் விளைவாக, தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இப்போது தீர்மானிக்கக்கூடிய சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை வைத்திருப்பதால், தி.மு.கவுக்குப் பெரிய வாக்கு வங்கி கிடைக்கப் போவதில்லை. எனவே, எங்களுக்கான வாய்ப்பு அதிகம்" என்றவர், " ரஜினியின் காலா படத்துக்கு இவ்வளவு பிரச்னை செய்கிறார்கள். காவிரி விவகாரத்தில் கருத்து சொல்லப் போய்த்தான், இப்படியொரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார் ரஜினி.
கண்டனக் குரல்
சமூகவிரோதிகள் கூட்டத்தில் ஊடுருவிவிட்டனர் என ரஜினி கூறிய கருத்துக்காகக் கொந்தளித்தவர்கள் எல்லாம், காவிரிக்குக் குரல் கொடுக்கப் போய்த்தான் இப்படியொரு சிக்கலை ரஜினி எதிர்கொள்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு கண்டனக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். எனவேதான், காலா பட விவகாரத்தில் ஜி.கே.வாசன் தலையிடுகிறார்.
20 ரூபாய் நோட்டு தினகரன்
இரண்டு மாநிலம் தொடர்பான பிரச்னையில், ஒரு படத்தை வெளியிடாமல் தடுப்பது எந்தவகையில் நியாயம் என்பதுதான் அவருடைய கருத்து. தமிழ்நாட்டைப் பொறுத்துவரையில் அடுத்து ரஜினி தலைமையில்தான் ஆட்சி அமையும். முதலமைச்சர் வேட்பாளர் கருணாநிதி எனப் பிரசாரம் செய்தபோதே 89 இடங்களில்தான் தி.மு.க வென்றது. ஸ்டாலின் தலைமைக்கு பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலோடு அதிகாரம் போய்விடும். தினகரனின் 20 ரூபாய் நோட்டு பிரசாரம் இனி எடுபடப் போவதில்லை. ஆர்.கே.நகரில், அஅவரையே முற்றுகையிடும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ரஜினி மட்டுமே நிலையாக இருப்பார்.
தமாகாவுக்கு ரஜினி உதவுவார்
மீண்டும் ரஜினி- த.மா.கா கூட்டணி உருவாகும். இந்த அணிக்குள் பா.ம.கவும் வரும் என நம்புகிறோம். 1996ல் எங்களுக்குச் சோதனையான காலத்தில் ரஜினி உதவினார். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் த.மா.கா ஆரம்பித்தோம். அண்ணாமலை படத்தில் ரஜினி பயன்படுத்திய சைக்கிளையே சின்னமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். இப்போது அரசியல்வாதியாக ரஜினி உருவாகிவிட்டார். அவர் மீண்டும் த.மா.காவுக்கு உதவுவார்" என்றார் நம்பிக்கையோடு.