ராஜ்யசபா தேர்தல்.. கடைசி நேரத்தில் காய் நகர்த்தி பார்த்து களைத்து போன ஜி.கே.வாசன்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் கடைசி நேரத்தில் களம் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தலாம் என மத்திய அமைச்சர் ஜி.கே.,வாசன் முயற்சித்து பார்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஜி.கே.வாசன் உட்பட 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் பிப்ரவரி 7-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த ஒருவார காலமாக பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு ஒருநாளே எஞ்சிய நிலையில் நேற்று திடீரென ஜி.கே.வாசன் தரப்பு விறுவிறுவென முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியது.
அதிமுக, திமுக பலம்
தற்போதைய நிலையில் அதிமுக அணியில் 5 எம்.பிக்கள் வெல்வது உறுதியாகி இருக்கிறது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுக மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறது. வேறு யாரும் 6வது இடத்துக்கு போட்டியிட்டால் தேர்தல் நடத்த நேரிடும் என்பது நடைமுறை.
கடந்த தேர்தலில்..
கடந்த ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு போட்டி இருந்ததால் தேர்தல் நடைபெற்றது. ஆனால் திமுக வேட்பாளரை காங்கிரஸ் ஆதரித்ததால் அக்கட்சி வேட்பாளரான கனிமொழி வென்றார்.
ஜி.கே.வாசன் முயற்சி..
தற்போதைய தேர்தலில் போட்டியிடுவது பற்றி தேமுதிக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ஒதுங்கி நிற்கிறது. ஆனால் திடீரென ஜி.கே.வாசன் தம்மை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கும் முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டாராம்.
காங்கிரஸ் மேலிடம் அட்வைஸ்
இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் ஜி.கே.வாசன் பேச, தேமுதிக- திமுக ஆதரவு இருந்தால் நீங்கள் போட்டியிடலாம் என அட்வைஸ் செய்திருக்கிறது.
ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஜி.கே.வாசன் பலமுறை பேச்சு நடத்திப் பார்த்திருக்கிறார். ஆனால் காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என்பதில் உறுதியாக இருக்கும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக ஆதரவு இல்லை என்று கூறிவிட்டார்.
தேமுதிக மூவ்
அதே நேரத்தில் தேமுதிகவோ, தம்மிடம் 21 எம்.எல்.ஏக்கள் இருக்கிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் என்னென்ன வகையில் எல்லாம் எம்.எல்.ஏக்களை வளைக்க முடியும் என்று ஜி.கே.வாசனுடன் ஆலோசித்திருக்கிறது. இதற்காக பாமக, புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ. நிலக்கோட்டை ராமசாமியுடனும் வாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்ததாம்.
திமுக பிடிவாதம் நீடிப்பு
கடைசியாக திமுக தேர்தல் களத்தை விட்டு விலகாத நிலையில் 6வது வேட்பாளர் இடத்துக்கு போட்டியிட்டு வெல்வது கடினம் என்பதால் கடைசி நிமிடம் வரை திமுக ஆதரவுக்காக காத்திருப்போம் என்ற முடிவுக்குப் போனாராம் வாசன். காங்கிரஸ் மேலிடமும் ஆதரவு இல்லாத நிலையில் போட்டியிட வேண்டாமே என்று சொல்லியிருக்கிறது..
தமாகா உருவானால்..
திமுக தரப்போ, காங்கிரஸை விட்டு வெளியே வந்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கி அதனுடன் கூட்டணி வைக்கும் நிலையில் வேண்டுமானால் வாசனை ஆதரிக்கலாமே தவிர தற்போது எதற்கு வாசனை ஆதரிக்க வேண்டும் என்கிறதாம்.
இதனால் ஜி.கே., வாசன் தரப்பு, அனைத்து முயற்சிகளும் பலன் தராமல் போய்விட்டதே என்ற அப்செட்டில் இருக்கிறதாம்.