தமாகாவை பலவீனப்படுத்தும் வகையிலான பேட்டிகளை ஏற்க முடியாது: பீட்டர் அல்போன்ஸுக்கு வாசன் வார்னிங்
மதுரை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் டிவி, பத்திரிகைகளுக்கு யார் பேட்டி கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது என்பது தமாகாவின் இறுதி முடிவு. இந்த முடிவை ஏற்பதுதான் தமாகாவின் வளர்ச்சிக்கு சரியானதாகும்.
கூட்டணி முடிவை ஒருசிலர் ஏற்காமல் இருப்பது என்பவர் அவரவர் விருப்பம். அதற்காக தமாகாவை பலவீனப்படுத்தும் வகையில் பேட்டிகளை யார் கொடுத்தாலும் ஏற்க முடியாது.
தமாகாவில் இருந்து யாரும் விலகி காங்கிரஸில் சேரவில்லை. காங்கிரஸை விட்டு த.மா.கா வெகுதூரம் சென்றுவிட்டது. ஆகையால் எங்களைப் பற்றி அவர்கள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்ததை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் ஜிகே வாசன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.