ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஜிகே வாசன், ஞானதேசிகன் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னாள் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவரும் ஜி கே வாசனின் தீவிர ஆதரவாளருமான ஞானதேசிகன், கட்சித் தலைமை தம்மை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் புதிய தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்று நியமித்தார் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
புதிய தலைவருக்கு வாழ்த்துக் கூறிய ஞானதேசிகன், காங்கிரஸ் மேலிடம் குறித்து தாம் விமர்சிக்கவில்லை என்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சுற்றி இருக்கும் சிலரைப் பற்றியே விமர்சனங்களை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளித்து இளங்கோவன் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை இருப்பதாகவும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
வாசன் வாழ்த்து
கட்சியை உடைத்துக் கொண்டு செல்வார் என்று கடந்த இரு தினங்களாகக் கூறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன் இன்று சத்யமூர்த்தி பவனுக்கு வந்து, புதிய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வாழ்த்தினார்.