For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவை காயப்படுத்துவதை காங்கிரசாரால் ஏற்க முடியாது: நட்வர்சிங்குக்கு ஞானதேசிகன் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது புத்தகத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியாவை காயப்படுத்துவதை காங்கிரசாரால் ஏற்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

Gnanadesikan condemn Natwar Singh on autobiography

இது தொடர்பாக ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நட்வர்சிங் அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட இருக்கிறார். இந்த புத்தகத்தில் சோனியா காந்தி பற்றியும், ராகுல்காந்தி பற்றியும் எழுதி, சோனியா காந்தி 2004ல் பிரதமர் பதவி ஏற்க மறுத்த காரணம், ராகுல் காந்தி தன் பாட்டியைப் போல், தந்தையைப் போல் ஆகிவிடக் கூடாது என்ற அச்சத்திலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் பதவி ஏற்கவில்லை என்று எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பிய போது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்றும், 45 ஆண்டுகள் குடும்ப நண்பராக இருந்த தன்னை மிக மோசமாக சோனியா நடத்தினார் என்றும், வேறு இந்தியராக இருந்தால் இது நடந்திருக்காது என்றும் நட்வர்சிங் அந்த புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்திருக்கிறது.

முன்பெல்லாம் புத்தகங்கள் எழுதுபவர்கள், சுயசரிதை எழுதுபவர்கள் சரித்திர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்பவர்கள் உள்ளது உள்ளபடி எழுதி, அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது வழக்கம். இன்றைக்கு அந்த நிலை மாறி, தன் சொந்த லாபங்களுக்காக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்வதும், அதற்காக எந்த ஆதார குறிப்பும் இல்லாமல், தன் புத்தகங்கள் விற்க வேண்டும், மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று அரசியலில் பணியாற்றியவர்கள், அரசியல்வாதிகள் புத்தகங்கள் எழுதுவது நடைமுறை வழக்கமாகி வருகிறது.

ராகுல்காந்தி, சோனியாவை பிரதமர் பதவி ஏற்கக்கூடாது என்று சொன்னதற்கு நட்வர்சிங்கிடம் உள்ள ஆதாரம் என்ன ? நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்று நீதிமன்ற கூண்டுக்குள் நின்று சத்தியம் செய்கிற சாட்சிகள் கூறுகிற வாக்குமூலங்கள் பொய்யாகிற போது, புறக்கணிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் கருத்து எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் முதன்மை அதிகாரியாக இருந்தவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். பா.ஜ.க. திட்டத்தால் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில் இதேபோல, பிரதமர் அலுவலக கோப்புகள் 10, ஜன்பத் சாலை வீட்டுக்கு அனுப்பப்பட்டது என்று எழுதினார்.

சோனியா காந்தி மனம் நொந்து சொல்லியிருப்பதைப் போல, தன்னுடைய மாமியார் சல்லடையாக குண்டுகள் துளைத்தை கண்ணெதிரே பார்த்தவர், தனது அன்பு கணவர் மனிதவெடிகுண்டால் ஸ்ரீபெரும்புதூரில் சுக்கு நூறாக ஆக்கப்பட்ட துயரத்தையும் தன் மனதில் தாங்கிக் கொண்டிருப்பவர்.

இதுபோல் அவரை காயப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் அவரை ஏதும் செய்யாது என்றாலும் கூட இந்நாட்டு மகளாக, காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று, இந்த தேசத்தின் நலனுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தாயை மேலும் மேலும் இப்படி காயப்படுத்துகிற நிகழ்வுகள் காங்கிரசாரால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நட்வர்சிங்கின் மகன் பா.ஜ.க.வில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பதை பலர்அறியவில்லை என்றாலும், நான் அறிவேன். அமித்ஷாவிடமும், மற்றவரிடமும் தன் மகனின் அரசியல் ஏற்றத்திற்கு இதுபோன்ற பொய்மைகள் உதவுமேயானால் உதவிவிட்டு போகட்டும்.

இவ்வாறு ஞானதேசிகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Congress Committee president B.S. Gnanadesikan condemn the attempt made by Mr. Natwar Singh, former Foreign Minister to sell his self-serving autobiography through scurrilous attacks on the Congress president, Sonia Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X