சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் விரைவில் கைது? #vaikundarajan
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சட்டவிரோத தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக விரைவில் கைது செய்யப்படக் கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோ கடந்த திங்கள்கிழமையன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே நாளில் மேலும் 6 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த 6 அதிகாரிகளில் 3 பேர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையை சேர்ந்தவர்கள்; மற்ற 3 பேரும் சுற்றுச் சூழல் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.
ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் திடீரென ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடந்த 1-ந் தேதியன்று கூடி ஆலோசனையும் நடத்தியிருந்தது.
ஆதாரங்கள் தர மறுப்பு
இந்த நிலையில் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது, மின்சார கொள்முதல் முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களில் ஞானதேசிகனும் அதுல் ஆனந்தும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சட்டவிரோத தாது மணல் விவகாரத்தில் வைகுண்டராஜனை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஞானதேசிகனும் அதுல் ஆனந்தும் தர மறுத்தாக கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பா
தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை வைகுண்டராஜன் தூண்டிவிடுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வைகுண்டராஜனை கைது செய்வதில் தீவிரம் காட்டுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரண்டர் வைகுண்டராஜன்
இதனையடுத்தே வைகுண்டராஜன், தாம் சசிகலா புஷ்பாவை தூண்டிவிடவில்லை என தமது நியூஸ் 7 தொலைக்காட்சியில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் உளவுத்துறை தகவல்களோ வைகுண்டராஜனே சசிகலா புஷ்பாவை இயக்குவதாக கூறுகிறது.
அடுத்தடுத்து கைது?
இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோரும் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.