தமாகா என்ன சாமியார் மடமா? துறவறமா போகிறோம்? வாசனுக்கு ஞானசேகரன் 'நறுக்' கேள்வி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்பது சாமியார் மடமா? எல்லாவற்றையும் இழந்துவிட்டு துறவறமா போகப் போகிறோம் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு மாஜி துணைத் தலைவரான அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட ஞானசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் ஞானசேகரன். முன்னதாக நேற்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்.
இதனிடையே அதிமுகவில் இணைந்தது குறித்து ஞானசேகரன் கூறியுள்ளதாவது:
சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்காமல், வெற்றுக் கூட்டணியை உருவாக்கினார் ஜி.கே.வாசன். கட்சியில் உள்ள அனைவரிடமும், ' அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்க இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிக் கூட்டணியில் இருப்போம் என்றார். அதை நம்பித்தான் தீவிரமாக வேலை பார்த்தோம். அ.தி.மு.கவில் 15 சீட்டுகள் வரையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில், அ.தி.மு.கவில் நம்மை அடமானம் வைக்க முடியாது என மக்கள் நலக் கூட்டணியின் பக்கம் போனார்.
தொண்டர்களை ஏமாற்றிவிட்டார்...
9 மாத காலமாக, அ.தி.மு.க அணி என்று சொல்லிக் கொண்டே தொண்டர்களின் மனதில் ஆசை வளர்த்து ஏமாற்றிவிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டதாக உறுதியாக அறிவிக்கவில்லை. தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப கட்சியை வளர்க்கும் நிலையில் அவர் இல்லை. கூட்டு முயற்சியாக யாரிடமும் கலந்து பேசவும் அவர் விரும்பவில்லை.
சாமியார் மடமா?
தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டார். தலைவர் மூப்பனாரைப் போல கட்சியை நடத்தாமல், பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் ஜி.கே.வாசன். நாங்கள் என்ன சாமியார் மடத்திலா இருக்கிறோம்? எல்லாற்றையும் இழந்து துறவறம் போவதற்கு?
அதிமுகவுக்கு நிகர் எதுவும் இல்லை
மக்கள் பணிக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் அ.தி.மு.கவுக்கு நிகராக வேறு எந்தக் கட்சியும் கிடையாது. எனவேதான், முழு மனதோடு அ.தி.மு.கவில் ஐக்கியமானேன்.
ஜெ. உறுதி...
இன்று முதல்வர் ஜெயலலிதா எங்களிடம், மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார். முதல்வர் கொடுத்த உறுதியால் எங்களோடு வந்தவர்கள் மகிழ்ச்சிடைந்தார்கள். த.மா.காவில் மிச்சம் மீதியிருக்கின்ற நிர்வாகிகளும் விரைவில் எங்களுடன் வருவார்கள்.
ஆளே இல்லாத டீ கடையில்...
என்னுடைய ஒரே கேள்வியெல்லாம், ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன்? . இவ்வாறு ஞானசேகரன் கூறினார்.